தமிழகத்தில் ஐபோன் தயாரிக்கும் நிறுவனத்தில் அடுத்த அதிரடி திட்டம் !

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில்,ஆப்பிள் ஐபோன்களுக்கான உதிரிபாகங்கள் தயாரித்து கொடுக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஐ-போன்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் ஐ-பேட்களையும் தயாரிக்கும் முடிவு செய்துள்ளது.

அடுத்த இரண்டாண்டு காலத்தில், ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க பாக்ஸ்கான் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் ஐ-போன்களுடன், ஐ-பேட் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவனத்தின் இதர தயாரிப்புகளையும் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழ்நாடு அரசுடன், ஏற்கனவே இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக பாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். அதேவேளையில், மேக் (MAC) மடிக்கணினிகளை உற்பத்தி செய்யும் திட்டம் ஏதும் இப்போதைக்கு இல்லை என்றும், ஐ-பேட்களை தயாரிக்கும் முடிவையடுத்து, பாக்ஸ்கான் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் வேலைவாய்ப்பும் கணிசமாக அதிகரிக்கும் என்றும் பாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version