பிரதமர் மோடி விரித்த வலை.. சிக்கிய எதிர்கட்சிகள்…சிலிண்டருக்கு ரூ.100 எப்போ தருவீங்க…?

Prime Minister Narendra Modi

Prime Minister Narendra Modi

பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்த சிலிண்டர்களின் விலை 200 ரூபாய் குறைப்பு தமிழகத்தில் தி.மு. க அரசுக்கு பெருத்த சவாலாக உருவெடுத்து இருக்கிறது.

நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடி வருகின்றார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை 200 ரூபாய் குறைப்பு
என்ற அறிவிப்பு குடும்ப தலைவிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லி நகரில் மிக அண்மையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு பற்றிய இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல், உஜ்வாலா திட்டத்தின்கீழ் உள்ள பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக 200 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்மூலம் 10.35 கோடி பேர் பயனடைவார்கள். இதற்காக மத்திய அரசுக்கு ஒரு ஆண்டுக்கு 7,500 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். இனி உஜ்வாலா திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குவோர் 700 ரூபாய்க்கும், மற்றவர்கள் 900 ரூபாய்க்கும் சிலிண்டர்களை வாங்க முடியும்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு இவ்வாண்டின் இறுதியில் நடைபெறும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மாநில சட்டப்பேரவை மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து வெளியிடப்பட்டது என்று காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிகள் குறை கூறினாலும் அவர்களுக்கு வேறொரு விதத்தில் செக் வைப்பதாகவே இது அமைந்துள்ளது.

ஏனென்றால் இனி சட்டப்பேரவை தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்க தயங்கும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருவேளை இதையும் மீறி அறிவித்தால் ஒரு சிலிண்டருக்கு 600 ரூபாய் வரை குறைப்போம் என்றுதான் அவர்களால் அறிவிக்க முடியும்.

ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழேயுள்ள 14 லட்சம் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும் 500 ரூபாய் விலை குறைப்பு என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தாலும் அந்த மாநில அரசுக்கு அது ஒரு பெரிய நிதிச் சுமையாகவே அமைந்து விட்டது.

உஜ்வாலா பயனாளிகளுக்குமத்திய அரசு மேலும் 200 ரூபாயை குறைத்து இருப்பதால், ராஜஸ்தான் அரசு இன்னும் 200 ரூபாய் விலையை குறைக்கவேண்டும் என்கிற கோரிக்கை அந்த மாநிலத்தில் தீவிரமாக எழுவதற்கான வாய்ப்புகளே அதிகம். ஏனென்றால் மத்திய அரசே 400 ரூபாய் குறைத்து விட்ட பிறகு 100 ரூபாய் என்பது மிகக்குறைவான தொகையாகவே கருதப்படும்.

அதேபோல தமிழகத்தில் 2021 தேர்தலில் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.அதனால் நீங்க எப்போ தருவீங்க? தேர்தல் வாக்குறுதியை நிறைவேத்துவீங்களா?…. மாட்டீங்களா?… என்று திமுக அரசை நோக்கி தமிழக மக்கள் கேள்வி கேட்கும் நிலையும் ஏற்பட்டுவிட்டது.

மேலும் 27 மாதங்களுக்கு தமிழக மக்கள் குறைந்த பட்சம் 22 கேஸ் சிலிண்டராவது வாங்கி இருப்பார்கள். அப்படியென்றால் 2200 ரூபாய் நிலுவையில் இருக்கிறதே அதையும் சேர்த்து தருவீங்களா?… என்ற கேள்விகளும் திமுக அரசிடம் எழுப்பப்படலாம்.

அது மட்டுமல்ல, 2021 தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் குறைப்போம், டீசல் விலையை நான்கு ரூபாய் குறைப்போம் என்று வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் பெட்ரோலுக்கு மட்டும் இரண்டு ரூபாய் குறைத்தீர்கள். மீதி 3 ரூபாயை எப்போது குறைப்பீர்கள்? டீசல் விலை குறைப்பை பற்றி மூச்சே காணோமே?…என்ற கிடுக்குபிடி கேள்விகளும் முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி தமிழக எதிர்க்கட்சிகள் கேட்கும் நிலையும் உருவாகும்.

தவிர மாநில பாஜக தலைவர் அண்ணாமலை,”இந்த நேரத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி எண் 503-ல் கூறிய ஊழல் திமுக, ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் கடந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்” என்று கிண்டலடித்தும் இருக்கிறார்.

Exit mobile version