தீவிரமாகும் போராட்டங்கள்.. இந்தியாவுடன் இணைய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் ஆர்வம்!

Jammu

Jammu

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாத்தில் மிகப் பெரியளவில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. 1947 இந்தியா சுதந்திரம் அடைந்த வேளையில் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய மறுத்தது. நீண்ட இழுபறிக்குப் பின், ஜம்மு – காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. ஆனால், அதற்கு வடக்கே உள்ள 13,297 சதுர கி.மீ., பரப்புள்ள பகுதி, ஆசாதி காஷ்மீர் என்ற பெயரில் தனி பகுதியாகச் செயல்பட முடிவு செய்தது.

இது இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீரின் ஒரு பகுதி ஆகும் கடந்த 1947இல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்த பகுதியை ஆக்கிரமித்தது. இந்த பகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்காமல் பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.இந்தப் பகுதியை பாகிஸ்தான், ஆசாதி காஷ்மீர் என்றழைக்கிறது. அதே நேரத்தில் இந்தியா, இந்தப் பகுதியை பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்கிறது. காஷ்மீரின் ஒரு பகுதி யாக இருந்த இந்த இடத்தை மீட்பதற்காக மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், அங்கு பல மனித உரிமை மீறல்கள் நடப்பதாக நீண்டகாலமாக புகார் உள்ளது.

தன்னாட்சி உள்ள பகுதியாக இருப்பதால், அங்கு எந்த வளர்ச்சிப் பணிகளையும் பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளவில்லை தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதை கண்டித்து, பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்தப் போராட்டங்கள் சமீபத்தில் அதிகரித்துள்ளன.இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது இந்திய கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதிகள் மோடி அரசு வந்த பிறகு வளர்ச்சியை நோக்கி செல்கிறது. தீவிரவாத செயல்கள் முற்றிலும் குறைந்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்துஸ்துக்கான 370-வது சட்டப் பிரிவை கடந்த 2019-ல்ரத்து செய்த பிறகு அங்கு சுற்றுலாத் துறை வளர்ச்சி விறுவிறுப்படைந்துள்ளது.காஷ்மீரின் ஸ்திரத்தன்மையை வெளி உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் ஜி20 நாடுகளின் சுற்றுலா தொடர்பான மாநாடு கடந்த மே 22-24 தேதிகளில் நடத்தப்பட்டது. இதன் மூலம், ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.

ஜம்மு காஷ்மீருக்கு கடந்த 2008-ல் 77 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்த நிலையில், கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 1.80 கோடியாக அதிகரித்துள்ளது. விவசாயம் சார்ந்த ஒட்டுமொத்த பொருளாதாரம் கடந்த நிதி ஆண்டில் 8 சதவீத வளர்ச்சியை எட்டிப்பிடித்துள்ளது. ஜம்மு காஷ்மீரை நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்க ரயில் பாதை திட்டங்களை பிரதமர் மோடி அதிக அளவில் செயல்படுத்தியதே இதற்கு காரணம் என கூறுகின்றனர்.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் அருகே இருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பகுதியில் வளர்ச்சி என்பதே இல்லை மேலும் பாகிஸ்தான் நிர்வாகம் மற்றும் பாகிஸ்தான் போலீஸ் அம்மக்களின் மீது அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இவ்வாறு நடந்த போராட்டங்களின்போது, போலீசார் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசியதில், சமீபத்தில் இரண்டு சிறுமியர் உயிரிழந்தனர். இதையடுத்து, மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாபராபாத் மற்றும் ராவலகோடி உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் போராட்டங்கள் மிகவும் தீவிரமாக உள்ளன.இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்து, அங்கு பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோர், பாகிஸ்தான் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடந்து உள்ளன.இதற்கிடையே, போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீச உத்தரவிட்ட, ஆக்கிரமிப்பு காஷ்மீரின் உதவி போலீஸ் கமிஷனர் ஒருவர், போராட்டக்காரர்களால் அடித்துக் கொல்லப்பட்டு உள்ளார்.

பாகிஸ்தான் கடந்த சில மாதங்களாகவே மிக மோசமான ஒரு பொருளாதார சிக்கலில் மாட்டி இருக்கிறது. சர்வதேச அமைப்புகள் 3 பில்லியன் டாலர் கொடுத்து உதவி செய்த போதிலும் நிலைமை இன்னும் முழுமையாகச் சீராகவில்லை. அதேநேரம் சர்வதேச நாணய நிதியம் விதித்த கட்டுப்பாடுகளால் மின்சாரம் தொடங்கிப் பல கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதனால் அங்குப் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது

Exit mobile version