பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். கொடூரமான சம்பவத்திற்கு பிறகு. சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய பயங்கரவாதிகளைப் பிடிக்க ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சிறப்புப் படை, பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் இந்திய ராணுவம் 20-25 கி.மீ சுற்றளவில் ஒரு பெரிய சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தானின் பங்கு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்தசூழலில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி வாகா எல்லை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு போடப்பட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு, அங்கிருந்து அதிகாரிகள் வெளியேற உத்தரவிடப்பட்டனர். தூதரகத்தின் வெளியே இருந்த பேரிகார்டுகளை எல்லாம் போலீசார் எடுத்துவிட்டனர்.இந்தநிலையில், டெல்லி பாகிஸ்தான் தூதரகத்துக்குள் ஒருவர் கேக் எடுத்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. அப்போது அவரை சூழந்த பத்திரிகையாளர்கள், எதற்காக இந்த கேக்கை எடுத்துச் செல்கிறீர்கள். பதற்றமான சூழல் நிலவும் போது உங்கள் அலுவலகத்துக்குள் கேக் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அந்த அதிகாரி எந்த தகவலையும் சொல்லாமல் கேக்கை உள்ளே எடுத்துச் சென்றுவிட்டார்.
இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.ஒரு எக்ஸ் பயனர், “நாடு முழுவதும் பதற்றமான சூழல். இந்த நேரத்தில் கொண்டாட்டம் எதற்கு? வெட்ககேடான காட்சி” என்று கூறியுள்ளார்.மற்றொருவர், டெல்லியில் ப்ளாட் வாங்கலாம் என்று நினைத்திருந்தேன். பாகிஸ்தான் தூதரகத்தை வாடகைக்கு எடுக்கவோ அல்லது விலைக்கு வாங்கவோ முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், அவர்கள் கற்பனை செய்து பார்த்திராத வகையில், கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.பிகார் மாநிலம் மதுபானி பகுதியில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி காஷ்மீர் தாக்குதல் குறித்து பேசும்போது,இந்த பிகார் மண்ணில் இருந்து முழு உலகிற்கும் ஒன்றை நான் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். காஷ்மீர் பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொரு பயங்கரவாதிகளையும் அடையாளம் கண்டுபிடித்து நிச்சயமாக அவர்களை தண்டிப்போம்.
அவர்களை இந்த உலகத்தை விட்டு அகற்றுவோம். பயங்கரவாதத்தால் இந்தியாவின் உணர்வு ஒருபோதும் உடைக்கப்படாது. பயங்கரவாதத்தை தண்டிக்காமல் விடமாட்டோம். நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்த உறுதியான நிலைப்பாட்டில் முழு தேசமும் ஒன்றுபட்டு நிற்கிறது.
மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் நிற்கிறார்கள். இந்த நேரத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த பல்வேறு நாடுகளின் மக்களுக்கும், அவர்களின் தலைவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.இந்த சம்பவத்தால் இந்தியா சோகமாகவும் வேதனையாகவும் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அவர்கள் நினைத்து பார்த்திராத வகையில் மிக கடுமையாக தண்டனை கிடைக்கும்” உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்”என்று தெரிவித்துள்ளார்.