கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.
சில நாள்களுக்கு முன்பு அதிகாலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி தமிழ்நாடு அரசு மீதும் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,“என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில். திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். காவல் துறையினர் மீது மரியாதை இழந்துவிட்டனர், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி விசாரணை முடியும்வரை காத்திருக்க வேண்டும் என்கிறார்.உளவுத்துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக உள்ளார், மாணவி ஸ்ரீமதியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அம்மாவட்டத்தைச் சேராதவர்களாக இருக்க வேண்டும் மற்றும் @BJP4TamilNadu இதற்கு முன் கூறியது போல் இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்.என்று தனது கருத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















