சோழர், பாண்டியர், பல்லவர் குறித்து வரலாற்று புத்தகங்கள் இல்லாதது ஏன்..? அமித்ஷாவின் அதிரடி கேள்வி.!

அண்மையில் நடிகர் அக்‌ஷய்குமார், வரலாற்றுப் புத்தகத்தில் முகலாயர்கள் குறித்துதான் அதிகப் பாடங்கள் இருக்கின்றன. இந்து அரசர்களைப் பற்றி மிக குறைவாகவே பாடங்கள் உள்ளன என்று பேசியிருந்தார். இந்நிலையில் அவருடைய கருத்தை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் பிரதிபலிக்கும் வகையில் பேசியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்தியமைச்சர் அமித் ஷா பேசுகையில், “இந்தியாவில் பல்வேறு மன்னர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் முகலாயர்கள் குறித்து மட்டுமே அதிக புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். பாண்டிய மன்னர்கள் 800 ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளனர். 

அஸ்ஸாமைச் சேர்ந்த அகோம் பேரரசு 650 ஆண்டுகளும், பல்லவர்கள் 600 ஆண்டுகளும், சோழர்கள் 600 ஆண்டுகளும் நாட்டை ஆண்டிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை மெளரிய பேரரசு 550 ஆண்டுகள் ஆட்சி நடத்தியிருக்கிறது. சாதவாகனர்களின் ஆட்சி 500 ஆண்டுகளும், குப்தர்களின் ஆட்சி 400 ஆண்டுகளும் இந்தியாவில் நீடித்திருக்கிறது. குப்த வம்ச அரசர் சமுத்திர குப்தர் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க பெரும் கனவு கண்டார். ஆனால், அவரை குறித்து எந்தப் புத்தகமும் எழுதப்படவில்லை. மராட்டிய மன்னர் வீர சிவாஜி, முகலாயர்களை எதிர்த்து தீரத்துடன் போராடினார். ராஜஸ்தானின் மேவார் பகுதி மன்னர் பப்பா ராவல் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற முகலாயர்களை விரட்டினார். அவர் குறித்தும் எந்த புத்தகமும் இல்லை.

பஞ்சாப்பில் சீக்கிய குருக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் குறித்தும் ஆய்வு செய்து உண்மையான வரலாறை எழுத வேண்டும். 1857ஆம் ஆண்டு முதலாம் சுதந்திர போராட்டம் குறித்து வீர சாவர்க்கர் புத்தகம் எழுதினார். அவர் புத்தகத்தை எழுதாமல் இருந்திருந்தால் அந்தக் கால வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கும். இந்தியாவை ஆட்சி செய்த பழங்கால மன்னர்கள் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கவனம் செலுத்தாதது ஏன்? இனிமேலாவது இவர்கள் குறித்து அதிகப் புத்தகங்களை எழுத வேண்டும். அப்படி எழுதப்பட்டால்தான், நாம் நம்பி கொண்டிருக்கும் பல வரலாறுகள் தவறு என்பது புரியும். உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். இதற்கான பணிகளை வரலாற்று ஆசிரியர்கள் இப்போதிருந்தே தொடங்க வேண்டும்.

அன்னியர்களுக்கு எதிரான ராஜஸ்தான் மன்னர்கள் குறித்த புத்தகத்தை இன்று வெளியிட்டிருக்கிறோம். இதை எழுதிய மருத்துவர் ஒமேந்திர ரத்னை வாழ்த்துகிறேன். அவர் மூலம் ராஜஸ்தானின் உண்மையான வரலாறு வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அரசு தரப்பில் வரலாறு எழுதப்பட்டால் பல்வேறு சர்ச்சைகள் எழும். எனவே வரலாற்றி அறிஞர்கள் இந்திய மன்னர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த புத்தகங்களை எழுத முன் வர வேண்டும்.” என்று அமித் ஷா பேசினார்.

Exit mobile version