‛‛ கூட்டாட்சி தத்துவத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மாநிலங்கள் வளர்ச்சியடைந்தால், தேசமும் வேகமாக வளர்ச்சி பெறும்” என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி, வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார்,இந்த நிகழ்ச்சியில், கேரள பாரம்பரிய உடையணிந்து பிரதமர் பங்கேற்றார். அம்மாநில பாரம்பரிய வேஷ்டி, சட்டை மற்றும் துண்டு அணிந்திருந்தார்.
டிஜிட்டல் அறிவியல் பூங்கா மற்றும் கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டங்களை துவக்கி வைத்து பேசியதாவது: வலிமையான மத்திய அரசால், இந்தியா மீதான நம்பிக்கைக்கு உற்சாகம் கிடைக்கிறது. இந்தியாவை பிரகாசமான இடத்தில் உள்ளதாக, உலக நாடுகள் பார்க்கின்றன.
விழிப்புணர்வு மற்றும் கல்வியறிவு அதிகம் பெற்றவர்கள் உள்ள மாநிலமாக கேரளா உள்ளது. மனிதநேயம் மற்றும் கடின உழைப்பு ஆகியவை அவர்களின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளது.
கூட்டாட்சி தத்துவத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கேரளா வளர்ச்சியடைந்தால், இந்தியா வேகமாக வளர்ச்சி பெறும்.கேரளாவிற்கு முதல் வந்தே பாரத் ரயில்சேவைகிடைத்துள்ளது. கொச்சிக்கும் வாட்டர் மெட்ரோ திட்டமும் கிடைத்துள்ளது. பல்வேறு வகையான வளர்ச்சி திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் விருப்பங்களை வந்தே பாரத் ரயில் எடுத்துக்காட்டுகிறது. கேரளாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இந்த ரயில் இணைக்கிறது. போக்குவரத்தை நவீனப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். கொச்சி மெட்ரோ வாட்டர் திட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான போக்குவரத்து திட்டங்கள் , ‛ மேட் இன் இந்தியா’ வில் உருவானவை.மத்திய அரசின் உலகளாவிய திட்டங்களால், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பயன்பெற்றுள்ளனர். எளிதாக தொழில் செய்யும் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது. இளைஞர்களின் தனித்திறன் வளர்ச்சியில் மத்திய அரசு முதலீடு செய்கிறது. உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















