பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொருளாளர் M.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-தமிழகத்தில் நியாய விலைக்கடை பணியாளர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு – நியாய விலைக்கடை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப ஊதியமும் ,அதேபோல் தரமான பொருட்களை சரியான எடையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நியாய விலைக்கடை பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச வேண்டிய அரசு நிர்வாகம்,அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என சர்வாதிகார போக்கில் எச்சரிக்கை விடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகம் முழுவதும் நடைபெறும் நியாய விலைக்கடை பணியாளர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அன்றாட, அத்தியாவசிய மிக்க உணவுப் பொருட்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளை உடனடியாக செய்திடுமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.