கஞ்சா போதையில் வழிப்பறி பட்டப்பகலில் அதிர்ச்சி! 18 வயது இளைஞர்கள் 3 பேர் கைது!

kanja bothai

kanja bothai

திருவாரூர் மாவட்டத்தில், கஞ்சா போதையில் குமாஸ்தாவை வழிமறித்து தாக்கியதோடு மட்டுமல்லாமல் செல்போன், பைக் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு சென்ற மூன்று இளைஞர்களை காவல்துறை கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், விஜயபுரம் அருகே பாரதி தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (42). இவர் குமாஸ்தாவாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (ஏப்.22) மாலை விஜயபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் நேதாஜி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, நெய் விளக்கு தோப்பு என்கிற இடத்தில் சரவணனை வழிமறித்து, மூன்று இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து அந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் சரவணன் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு பேபி டாக்கீஸ் சாலை வழியாக சென்றுள்ளார். மற்ற இருவரும் அவரை அருகில் உள்ள நகராட்சி கழிவறை கட்டிடத்திற்குள் கொண்டு சென்று அங்கு அவரை தாக்கி செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சரவணன் இது குறித்து திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது திருவாரூர் நகரத்திற்குட்பட்ட அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்த ராகவன் (வயது 19), ரஞ்சித் குமார் (வயது 18), வினோத் (வயது 23) ஆகிய மூன்று நபர்கள் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா போதையில் அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் இளைஞர்களிடம் இருந்து இருசக்கர வாகனத்தை மட்டும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்த மூன்று பேர் மீது ஏற்கனவே கஞ்சா போதையில் பொது மக்களுக்கு இடையூறு செய்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திருவாரூர் நகரத்திற்குட்பட்ட பல பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி, தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது.

எனவே காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கஞ்சாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய கலந்தாய்வு வழங்கி குற்ற செயலில் ஈடுபடாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே திருவாரூர் நகர மக்களில் எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version