குருபெயர்ச்சி பலன் 2024-2025 : ரிஷப ராசிகாரர்களின் நிலை உயரும்..செல்வாக்கு அதிகரிக்கும்! இந்த கோவிலுக்கு செல்லுங்கள்!

Guru Peyarchi

Guru Peyarchi

கார்த்திகை 2,3,4 ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும், ராசி எதுவென்று தெரியாத வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும், இ, ஈ, உ, எ, ஒ, வ, வா, வீ, வு, வே, வை… ஆகிய எழுத்துகளைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும் ராசியின் அதிபதி: சுக்கிரன். நட்சத்திர அதிபதிகள்: சூரியன், சந்திரன், செவ்வாய். யோகாதிபதிகள்: சனி, புதன், சுக்கிரன். மாரகாதிபதி: சுக்கிரன்.

அதிர்ஷ்டம் கொண்ட ரிஷபம்
கலைக்காரகன், அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்து, திட்டமிட்டு செயல்பட்டு அதிர்ஷ்டத்தை அடையும் ரிஷப ராசி நண்பர்களே! உங்கள் ராசியாதிபதியான சுக்கிரன்தான் அனைத்து கலைகளுக்கும் காரகன். களத்திரத்திற்கும் காரகன். காதல், கற்பனை, காவியம், களிப்பு, ரசிப்பு, சுகிப்பு, ஆசை, அன்பு, மயக்கம் என்ற நிலைகளை அனைவருக்கும் வழங்கிடக் கூடியவரும் உங்கள் ராசிநாதனான சுக்கிர பகவானே.

பெருந்தன்மை, ஒற்றுமை, மதிப்பு, மாபெரும் அதிர்ஷ்டம், வாகனம், வித்தைகள் என்று வழங்கிடக் கூடிய சுக்கிர பகவானே கண்களைப் பிரதிபலித்திடக் கூடியவர். மர்ம உறுப்புகளுக்கும், சிற்றின்ப சுகங்களுக்கும் காரகனானவர். வளமான வாழ்க்கைக்கு ஆதாரமானவர். உடல் வீரியத்திற்கு சக்தியானவர் என்பதால் உங்களின் கவர்ச்சியாலும் திறமையாலும் இனிமையாகப் பழகுவதாலும் எல்லோரிடமும் நெருக்கம் கொள்ளும் ஆற்றல் பெற்று விளங்குவீர்கள். மற்றவர்களால் நீங்கள் அடைந்த வெற்றிகளைவிட, நன்மைகளைவிட உங்களுடைய முயற்சிகளால், உங்களுடைய உழைப்பினால் நீங்கள் அடைந்தவையே எல்லாமுமாக இருக்கும்.

உங்கள் வாழ்க்கை என்பது உங்கள் அறிவாற்றலை கொண்டதாகவே இருக்கும். வாழ்க்கையின் ஒவ்வொன்றையும் நீங்களே தெரிந்து கொண்டு உங்கள் செயல்திறனால் அதில் வெற்றிபெற்று உங்களுக்குத் தேவையானவற்றை அடையக்கூடியவராக நீங்கள் இருப்பீர்கள். எந்த விஷயத்திலும் எப்போதும் அவசரப்படவும் மாட்டீர்கள், எதற்காகவும் ஆத்திரப்படவும் மாட்டீர்கள். எந்த ஒரு செயலில் ஈடுபடுவதாக இருந்தாலும் அதுபற்றி நன்றாக யோசித்து அதன் பிறகே செயலில் இறங்குவீர்கள்.

இயல்பாகவே நளினமான தன்மைகளும், மன ஆற்றலும், மன உறுதியும், நெஞ்சழுத்தமும் கொண்ட நீங்கள் எந்த கஷ்டத்தைக் கண்டும் சோர்ந்துபோக மாட்டீர்கள். கிடைக்கும் சுகத்தை நினைத்தும் அலட்டிக் கொள்ள மாட்டீர்கள். எல்லாவற்றையும் சமமாகவே என்னும் மனநிலை கொண்ட நீங்கள் பல இடங்களில் தாமரை இலையில் தண்ணீராகவே இருப்பீர்கள்.

எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வீர்கள். உணவு ஓய்வு என்பதெல்லாம் உங்களுக்கு இரண்டாம் பட்சமாகவே இருக்கும். எவ்வளவு உச்சத்திற்கு போனாலும் ஒரு தொழிலாளி போலவே உழைப்பீர்கள். என்றாலும், எப்போதும் உங்களுக்கு ஒரு தூண்டுகோல் தேவையாகவே இருக்கும். ஒரு சிலவற்றை உங்கள் போட்டியாளர்கள் செய்யும்போது அப்போதே செய்யாமல் போனோமே என்று வருந்துவீர்கள். ஆலோசித்து நீங்கள் அடையும் வெற்றிகளைவிட உழைத்து நீங்கள் அடையும் வெற்றியே பெரிதாக இருக்கும்.

உங்கள் மனதை தேவையற்ற வழிகளில் செலுத்த மாட்டீர்கள் என்பதால் உங்களை எவராலும் அவர்களுடைய வழிக்குத் திருப்பிவிட முடியாது. திடீர் யோகத்தை விடவும் படிப்படியாக உயர்ந்து நிலையான இடத்தை எட்டக்கூடிய நீங்கள் சாதாரணமானவற்றின் மீது உங்கள் கவனத்தை செலுத்தவும் மாட்டீர்கள். ஆசையும் கொள்ள மாட்டீர்கள். அற்ப விஷயங்களுக்கு அடிமையாகவும் மாட்டீர்கள். உங்கள் வாழ்க்கை நிலை எந்த அளவில் இருந்தாலும் நீங்கள் உபயோகப்படுத்தும் ஒவ்வொன்றும் ஆடம்பரமான, விலை உயர்ந்த, மதிப்புடைய, அழகு மிக்கவையாகவே இருக்கும்.

இயல்பாகவே உங்களுக்குப் போதிய வசதிகள் அமைந்திருக்கும். அமையாவிட்டாலும் அமைந்தே தீரும் என்று சொல்லலாம். பிறர் நம்பிடும் வகையில் செயல்படக் கூடியவர்களாக நீங்கள் இருப்பீர்கள் என்பதுடன், உங்கள் தகுதியை எந்த இடத்திலும் யாருக்காகவும் நீங்கள் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். உங்கள் நலன், உங்கள் குடும்ப நலன் என்பதில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அதன் உயர்வின் மீது உங்களின் முழு கவனமும் சிந்தனையும் இருக்கும்.

மனித உடலில் உங்கள் ராசி குரல்வளைக்கு சம்பந்தப்பட்டது என்பதால், செயல்புரியும் அளவிற்கு நீங்கள் பேச மாட்டீர்கள். வெட்டியான அரட்டைகளும் உங்களுக்குப் பிடிக்காது என்றே சொல்லலாம்.இயற்கையான உடல்வாகினை நீங்கள் பெற்றிருந்தாலும் விரைவில் சோர்ந்து விடக்கூடியவர்களாகவும், உடல்நிலை கோளாறுகளால் அவதிப்படக் கூடியவர்களாகவும் இருப்பீர்கள். உங்கள் உடலில் கழுத்து தொண்டை காதுகள் தாடைகள் போன்றவற்றில் பாதிப்புகளோ நோய் தொற்றோ, விபத்துகளால் காயங்களோ ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். தலையிலும் முதுகுத் தண்டிலும் வலிகள் ஏற்படக்கூடும் என்பதுடன், சில சமயங்களில் அவை அதிக அளவில் வேதனைகளையும் தரக்கூடும் என்பதால் மருத்துவ ஆலோசனைகளும், அதன்படி வாழ்வதும் உங்களுக்கு நன்மைகளை உண்டாக்கும்.

ஏதேனும் பிரச்சினைகளுக்கு நீங்கள் ஆளாகும் போதெல்லாம் அதை எப்படி எதிர்கொள்வது? அதிலிருந்து எப்படி மீள்வது? என்பது பற்றி நீங்கள் தனிமையில் இருக்கும் நேரங்களில் உங்களுக்குள்ளாகவே விவாதியுங்கள். எந்த நிலையிலும் எதற்காகவும் உங்கள் பிரச்சனைகளுக்கு மற்றவர்களிடம் சென்று ஆலோசனைகள் கேட்காதீர்கள்.

சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்ட நீங்கள் எதிர்பாலினரின் வலையில் சிக்கிக் கொள்பவராக இருப்பீர்கள். அதேபோல் எதிர்ப்பாலினரை உங்கள் வலையில் விழ வைக்கும் சக்தி பெற்றவர்களாகவும் இருப்பீர்கள். என்றாலும், எந்த ஒரு விஷயத்திலும் ஒரு எல்லை என்பதும், இத்துடன் நிறுத்திக் கொள்வோம் என்ற எண்ணமும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும். இருப்பதை விட்டுவிட்டு புதுப்புது நட்பு, புதுப்புது சேர்க்கை என்று அடுத்ததை நாடும் மனம் கொண்டவர்களாகவும் உங்களில் சிலர் இருப்பீர்கள்.

உங்களில் பலர் கல்வியாளராக, ஆராய்ச்சியாளர்களாக, ஆலோசகர்களாக இருப்பீர்கள். கம்பெனி நிர்வாகத்தில் மூளையாகவும் இருப்பீர்கள். நகை வியாபாரம், பேன்சி ஸ்டோர், வட்டிக்கடைகள், ஷேர் மார்க்கெட் போன்றவற்றின் வழியாக அதிக லாபம் காணக்கூடியவர்களாக இருப்பீர்கள். பருப்பு வகைகள், தேன், கடலை, சீரகம், புத்தக வியாபாரம் போன்றவையும் உங்களுக்கு லாபகரமாக இருக்கும்.

உங்கள் வாழ்க்கை என்பது எப்படி இருந்தாலும் பொதுநலத்தை விடவும் சுயநலமே உங்களிடம் மேலோங்கி இருக்கும். உங்களை முதலில் சரி செய்து கொண்டுதான் உறவுகளின் நலனில் கூட கவனம் செலுத்துவீர்கள். இவையெல்லாம் ரிஷப ராசியில் பிறந்த உங்களின் பொதுப் பலன்கள் ஆகும்.

நீங்கள் ரிஷப ராசியில் பிறந்திருந்தாலும், உங்கள் ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் கிரகங்கள் மாறுபட்டிருக்கும், லக்னங்களில் மாற்றம் இருக்கும், தசா புத்திகளில் வித்தியாசம் இருக்கும், பொதுவாக ஒருவருக்கு அமைந்திருப்பது போல் மற்றவர்களுக்கு கிரகங்கள் அமைந்திருக்காது என்பதால் ஜனன ஜாதகத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறுபடும்.

இந்த நிலையில் கோட்சார ரீதியாக, கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து நமக்கு உண்டாகப் போகும் பலன்களை நாம் அறிந்து கொள்கிறோம். ஜாதக ரீதியாக பாதகமான நிலை அடைந்திருப்பவர்களுக்கும், கோட்சார பலன்கள் நன்மையை உண்டாக்கிடக் கூடியவையாக உள்ளன. அந்த ரீதியில் சுப கிரகமான குரு பகவானின் பெயர்ச்சியை நாம் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம்.

சுற்றலில் விடும் ஜென்ம குரு
கடந்த ஒரு வருடமாக உங்கள் ராசியான ரிஷப ராசிக்கு 12 ம் வீடான, அயன, சயன, விரய ஸ்தானமான மேஷ ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் 1.5.2024 அன்று உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக சஞ்சரித்து பலன்களை வழங்கிட உள்ளார்.

கடந்த ஒரு வருடமாக 12 ம் வீட்டில் சஞ்சரித்த குரு பகவான் உங்களுக்கு நிறையவே விரயத்தை உண்டாக்கி வந்தார். ஒரு சிலர் மட்டும் அதை சுப விரயமாக மாற்றிக் கொண்டீர்கள். ஒரு சிலருக்கு செய்யும் தொழிலில் திருப்தி இல்லாத நிலையும், உழைப்பிற்குரிய வருமானம் இல்லாமல் போனதுடன் செலவும் அதிகரித்ததால் இருந்ததை விற்றும், அடகு வைத்தும், கடன் வாங்கியும் சிரமத்துடன் வாழ்க்கையை நடத்தி வந்திருப்பீர்கள். குடும்பத்திலும் நிம்மதி இல்லாத சூழலே நிலவியிருக்கும்.

இதுபற்றி ஒரு பழம் பாடலில், வன்மையற்ற ராவணன் முடி பன்னிரண்டில் வீழ்ந்ததும்…’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 12 ல் குரு சஞ்சரிக்கும் காலம் கண்டதோஷம் ஏற்படும் என்று கூறியுள்ளனர் நமது முன்னோர்கள். போனதெல்லாம் சரி; இப்போது ஜென்மத்தில் பிரவேசிக்க இருக்கும் குரு பகவான் என்ன செய்வார்? இக்காலமாகிலும் எங்களுக்கு நன்மையாக இருக்குமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் கேள்விக்கும் அதே பாடலில், ‘ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்…’ என்று ஒரு பதில் இருக்கிறது.

ஜென்ம ராசியில் குரு சஞ்சரித்த போதுதான் சீதையை இராவணன் கவர்ந்து சென்று சிறை வைத்திருந்தானாம். அதனால் ராமர் ஓரிடம் சீதை ஓரிடம் என்று இருக்க வேண்டிய நிலை உண்டானதாம்.
ஜென்மத்தில் குரு பகவான் அமரும் நிலை குறித்த பொதுவான பலன் இது. குருவை பொருத்தவரை 12 ம் இடமும் சரி, ஜென்ம சஞ்சாரமும் சரி இரண்டுமே சங்கடமான இடங்கள்தான்.

அப்படி என்றால் இந்த வருடமும் எங்களுக்கு சோதனைக் காலம்தானா? நன்மைகள் நடக்க இடமே இல்லையா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.உங்களுக்கு ஒரு தகவல் ஜென்ம ராசிக்குள் குரு சஞ்சரிக்கும் காலம் என்பது குடும்பம் ஓரிடம், தான் ஓரிடம் என்று வசிக்க வேண்டிய நிலை என்பது, உங்களுக்கு ஆதாயங்களை வழங்குவதாகவே இருக்கும்.

வேலையின் காரணமாக, உத்தியோகத்தில் கிடைத்த உயர்வினால், வியாபார நிமித்தமாக என்று வருமானத்திற்காகவே இக்காலத்தில் குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி தோன்றும். இக்காலத்தில்தான் பலருடைய குடும்ப வாழ்க்கை உயர்வு பெற்றிருக்கிறது. திருமணம், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு, சொத்து சேர்க்கை, தெய்வ அருள் என்பது உண்டாகிடக் கூடியதாக இருக்கிறது.
இக்காலத்தில் நிறைய அனுபவங்களை நீங்கள் சந்திப்பீர்கள், நிறையவே சிந்திப்பீர்கள், தொழில் குறித்தும், உத்தியோகம் குறித்தும் அடுத்தடுத்த செயல்களில் ஈடுபடுவீர்கள்.

இந்த நேரத்தில் உங்கள் ஜனன ஜாதகத்தில் பலமான நிலையில் கிரகங்கள் இருந்தால், தசா புத்தி நன்றாக இருந்தால், உங்களுக்கு இக்காலம் மேலும் யோகமான காலமாகவே இருக்கும்.குரு பகவான் அவர் அமரும் இடத்திற்கு சங்கடமான பலன்களை வழங்கினாலும், அவர் பார்க்கின்ற 5, 7, 9 ம் இடங்களுக்குரிய பலன்களை எல்லாம் சுபப் பலன்களாகவே வழங்கிடக்கூடியவர். பொதுவாக குரு பகவானின் பார்வைக்குத்தான் பலன்கள் என்பதால் அந்த இடங்களில் பகை பெற்ற கிரகங்கள் சஞ்சரித்தாலும் அவையெல்லாம் பலம் இழந்து விடும். அந்த 3 ஸ்தானங்களும் உங்கள் வாழ்க்கையில் வளத்தை உண்டாக்கும்.

பார்வைகளால் உண்டாகும் பலன்கள்

குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தினாலும், அங்கிருந்து தன் 5, 7, 9 ம் பார்வைகளை உங்கள் ராசிக்கு 5 ம் இடம், 7 ம் இடம், 9 ம் இடங்களின் மீது செலுத்தப்போகிறார் என்பதால், அந்த 3 இடங்களும் இக்காலத்தில் சிறப்படைய போகிறது.

முதலில் தனது 5 ம் பார்வையினால் உங்களின் பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானம் எனும் 5 ம் வீட்டைப் பார்க்கிறார் என்பதால், முதலில் உங்களிடம் இருந்த சங்கடங்கள் விலகி முன்னேற்றம் தோன்றும். உங்கள் உடல் நிலையும், மனநிலையும் ஆரோக்கியமாகும். உத்தியோகத்தில் இருந்து வந்த சிரமங்கள் குறைந்து சுமூகமான நிலை உருவாகும். சிலருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் ஏற்படும். மேலதிகாரிகளாலும் பாராட்டப்படுவீர்கள். சுயதொழில் புரிவோர் தொழிலில் முன்னேற்றமான நிலையையும் லாபத்தையும் காண்பீர்கள். இதுநாள் வரை குழந்தை பாக்கியம் இல்லாமல் மனக்கவலையுடன் வாழ்ந்து வந்தவர்களின் ஏக்கம் தீரும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். அவர்களின் எதிர்காலத்திற்கு வேண்டிய நன்மைகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துகள் கைவர யோகம் உண்டு. ஒரு சிலர் புதியதாக நிலம் வீடு வாங்குவீர்கள் என்பதுடன் குல தெய்வ அருளும் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும்.

அடுத்து தனது 7 ம் பார்வையினால் உங்கள் ராசிக்கு 7 ம் இடமாகிய களத்திர, நட்பு ஸ்தானத்தைப் பார்க்கும் குரு பகவான், திருமண வயது வந்தும் மண வாழ்க்கை அமையவில்லையே என்று மனம் வருந்திக் கொண்டிருந்தவர்களின் கவலையினை இக்காலத்தில் தீர்த்து வைப்பார். ஒரு சிலருக்கு காதலித்தவரையே துணையாக அமைய வைப்பார். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடிய நிலையை ஒரு சிலருக்கு உண்டாக்குவார். எதிர்பாலினரின் நட்பும் ஆதரவும் கிடைக்கப்பெற்று மனம் மகிழக்கூடிய நிலையை உண்டாக்குவார். நட்பு வட்டத்தில் உண்டான விரிசல்களை விலக்கி வைப்பார். நண்பர்களின் ஆதரவையும் உதவியையும் உண்டாக்கி உங்களை முன்னேற்றம் அடைய வைப்பார். சிறிய முயற்சியிலும் பெரிய அளவில் ஆதாயத்தை ஏற்படுத்துவார். வழக்குகளில் சாதகமான நிலையை உண்டாக்குவார். பயணத்தில் லாபத்தை ஏற்படுத்துவார். கூட்டுத் தொழிலில் இருந்த சங்கடங்களை நீக்கி லாபத்தை அதிகரிப்பார்.

அடுத்து, தனது 9 ம் பார்வையினை உங்கள் ராசிக்கு 9 ம் இடமான, பாக்கியம், பிதுர், தர்ம ஸ்தானமான 9 ம் இடத்தில் செலுத்தும் குரு பகவான், உங்கள் தேக நலனில் இருந்த பாதிப்புகளை அகற்றுவார். மனதில் தெம்பையும், தன்னம்பிக்கையையும் உண்டாக்குவார், தந்தை வழியில் நன்மைகளை வழங்குவார், பழைய பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைப்பார். வழக்குகளிலும் வெற்றிகளை வழங்குவார். வாழ்க்கைத் துணையின் வழியே உங்கள் அந்தஸ்தை உயர்த்துவார். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வைப்பார். தெய்வ வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பார்.

பொதுவில், ஒரு வாசல் உங்களுக்கு அடைக்கப்பட்டாலும் மூன்று வாசல்கள் உங்களுக்காக இக்காலத்தில் திறக்கப் போகிறது என்றே சொல்ல வேண்டும்.இவை யாவும் குரு பகவானின் பார்வைகளால் உங்களுக்கு உண்டாகப் போகும் பலன்கள் என்றாலும், சுய முயற்சி இல்லாமல் எதையும் நீங்கள் அடைந்து விட முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். சொந்தம், சுகம் என்று ஒரே இடத்தில் அடைந்து கிடக்காமல் எங்கே போக வேண்டும், யாரை சந்தித்தால் நம்முடைய வேலைகள் நடக்கும் என்பதை எல்லாம் யோசித்து திட்டமிட்டு செயல்பட்டால் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியும், உங்கள் வாழ்வில் நன்மைகளும் உண்டாகும்.

பலன்களை மாற்றும் அஸ்தமன காலம்
குரு பகவான் தன்னுடைய சஞ்சார நிலையினால் சாதகமான பலன்களை வழங்குவதுடன், பார்வைகளாலும் நற்பலன்களை ஜாதகருக்கு வழங்குவார். ஆனால், அவர் அஸ்தமனம் அடைந்திடக் கூடிய காலமான 3.5.2024 முதல் 2.6.2004 வரை அவரால் யாருக்கும் எத்தகைய பலன்களும் வழங்க முடியாமல் போகும். இது, ஒரு பக்கம் உங்களுக்கு சாதகமான நிலை என்றே சொல்ல வேண்டும். ஜென்ம குருவால் உண்டாகும் சங்கடங்கள் இக்காலத்தில் உங்களுக்கு ஏற்படாமல் போகும். உங்கள் பூர்வ புண்ணிய பலன்களின் அடிப்படையிலும், சுய ஜாதகத்தின் அடிப்படையிலும் இக்காலத்தில் பலன்கள் நடந்தேறும்.

வக்ர காலத்தில் மாறும் பலன்கள்
குரு பகவான் ஒரு ஆண்டு முழுவதும் ஒரு ராசிக்குள் சஞ்சரிப்பதால் அவரால் வழங்கப்படும் பலன்கள்
ஜாதகரை முன்னேற்றவும் செய்யும். சங்கடங்களுக்கு ஆளாக்கவும் செய்யும். அதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டிலும் நான்கு மாதங்கள் அவரை சூரிய பகவானின் சஞ்சாரம் வக்கிர கதிக்கு ஆளாக்கும். அந்தக் காலத்தில் நன்மையான பலன்களை வழங்கியவர்களுக்கு எதிர்மறையான பலன்களையும், பாதகமான பலன்களை வழங்கியவர்களுக்கு சாதகமான பலன்களையும் வழங்குவார்.

அந்த ரீதியில் உங்கள் ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் 15.10.2024 முதல் 11.2.2025 வரை வக்கிர குருவாகி உங்களுக்கு பலன்களை வழங்குவார்.பொதுவாக குரு பகவான் வக்கிரம் ஆகின்றபோது முன்பிருந்த ராசியின் பலன்களை வழங்குவார் என்பதால், இக்காலத்தில் விரய செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பப்படி நவீன பொருட்கள் வாங்குவீர்கள். புதிய வாகனம், சொத்து என்று இக்காலத்தில் வாங்குவதால் செலவுகள் அதிகரிக்கும். கையிருப்பு கரையும்.

பத்தாமிட சனியால் பதவிக்கு ஆபத்து
ரிஷப ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம் முழுவதும், கர்மக் காரகனான சனி பகவான் உங்கள் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழில் வழியே சில படிப்பினைகளை உங்களுக்கு ஏற்படுத்துவார். உங்களுடைய அக்கறை எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு தொழிலில் முன்னேற்றம் இருக்கும். இல்லை என்றால் சங்கடம் தோன்றும்.

பார்த்துவரும் உத்தியோகத்தில் கவனக் குறைவாக இருப்பதும், மற்றவரை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைப்பதும் சங்கடத்தை உண்டாக்கும். ஒரு சிலருக்கு மெமோ, எதிர்பாராத இடமாற்றம், தகுதிக்கும் குறைவான பொறுப்பு என்றெல்லாம் ஏற்படக்கூடும் என்பதால் இக்காலத்தில் கவனமுடன், பொறுப்புடன், நேர்மையுடன் செயல்படுவது அவசியம்.

லாப ஸ்தான ராகுவால் வரவு அதிகரிக்கும்
குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் காலம் முழுவதும், ராகு, லாப ஸ்தானமான 11 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வருமானம் வந்துசேரும். வரவேண்டிய பணம் இக்காலத்தில் வசூல் ஆகும். கேட்டிருந்த இடத்தில் இருந்து பணம் வரும். திருமணமாகி வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். பெரியோரின் ஆசீர்வாதம் உண்டாகும்.

நன்மைகள் அதிகரிக்கும். செய்து வரும் தொழிலில் இருந்த தடைகள், பாதிப்புகள் விலகும். நஷ்ட நிலை விலகி லாபம் அதிகரிக்கும். 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் பூர்வீக சொத்தில் சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும். குடும்பத்திலும் ஒன்றுவிட்டு ஒன்றாக ஏதேனும் ஒரு குழப்பம் தோன்றி மனதை சங்கடப்படுத்தும். குழந்தைகளால் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

சூரியனால் உண்டாகும் யோகம்
ஒவ்வொரு கிரகமும் அவரவர் சஞ்சரிக்கும் நிலைக்கேற்ப பலன்களை வழங்குவது போல், சூரிய பகவானும் அவரவர் ராசிக்கு 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது யோகமான பலன்களை ஜாதகருக்கு வழங்கி அவர்களை முன்னேற்றுவார். அந்த ரீதியில் ரிஷப ராசியினரான உங்களுக்கு இக்காலத்தில், ஆடி, ஐப்பசி, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார். உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளில் இருந்து உங்களை விடுவிப்பார்.

உங்கள் செல்வாக்கை அதிகரிப்பார். வம்பு வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலையினை ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுவார். எதிர்பார்த்த இட மாற்றத்தையும் பதவி உயர்வையும் வழங்குவார். உங்கள் செல்வாக்கை அதிகரிப்பார்.

பொதுப்பலன்
உங்கள் ராசிக்கு லாபாதிபதியான குரு பகவான் உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கும் காலத்தில் பெருமளவில் நற்பலன்களையே உங்களுக்கு வழங்குவார். லாபாதிபதியின் சஞ்சாரம் என்பதால் வருமானம் எந்தவிதமான தடையும் இல்லாமல் வரும். அலைச்சல் அதிகரிக்கும், வேலைபளு உண்டாகும் என்றாலும் அதன் காரணமாக உங்கள் நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவரின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். பொருளாதாரத்தில் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும்.

சமுதாயத்தில் தனி அந்தஸ்து ஏற்படும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். செய்து வரும் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் வளர்ச்சி தோன்றும். தம்பதியர் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமையும். தொழில் லாபகரமாக நடக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

பரிகாரம்
ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியுள்ள பகவான் ஸ்ரீரங்கநாதரையும் மகாலட்சுமியையும் வணங்கி வழிபட்டுவர வாழ்க்கை வளமாகும். ஐயாவாடியில் இருந்து அருள்பாலிக்கும் பிரத்தியங்கிரா தேவியை மனமுருகி வழிபட சங்கடங்கள் விலகும்

Exit mobile version