காஷ்மீர் சம்பவம் : இஸ்லாமிய வாசகத்தை ஓதச் சொன்னாங்க..அப்பா செய்யல சுட்டுட்டாங்க..மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்!

#PahalgamTerroristAttack

#PahalgamTerroristAttack

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின் படி மொத்தம் 26 பேர் உயிரிழந்ததாகவும் அதில்,  20 க்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள், இரண்டு உள்ளூர் மக்கள், ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

தாக்குதல் சம்பவம் நடந்ததை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை பாதியில் ரத்து செய்தார். இன்று (ஏப்ரல் 23, 2025) அதிகாலை அவர் இந்தியா திரும்பினார். அது மட்டுமின்றி, தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க உறுதியளித்துள்ளார்.

 இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த புனேவைச் சேர்ந்த சந்தோஷின் மகள் அசவரி, தனது தந்தையின் மரணத்திற்கு முன் நடந்த பயங்கர சம்பவத்தை பற்றி அதிர்ச்சியூட்டும் தகவலைப் பகிர்ந்துள்ளார். “துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பு, இஸ்லாமிய வாசகங்களை ஓதுமாறு என் தந்தையை பயங்கரவாதிகள் கட்டாயப்படுத்தினர். அவர் மறுத்ததால், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்,” என்று அவர் கூறினார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி வழியாகப் பகிர்ந்த தகவலின்படி, “நாங்கள் பைசரான் பள்ளத்தாக்கில் இருந்தபோது, திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. முதலில், இது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையிலான மோதல் என்று நினைத்தோம். ஆனால், உள்ளூர் காவல் அதிகாரிகளைப் போல சீருடை அணிந்திருந்த பயங்கரவாதிகள் எங்கள் கூடாரத்துக்கு வந்தனர்.

அதன்பிறகு தான் எனக்கு இது பயங்கரவாதிகள் தாக்குதல் என்பது எனக்கு தெரியவந்தது. பிறகு அவர்கள் முதலில் என் தந்தையை வெளியே வருமாறு அழைத்தனர்.நீங்கள் ஏன் பிரதமர் மோடிக்கு ஆதரவு அளிக்கிறீர்கள்? என கேட்டனர்.  சில விஷயங்களை வைத்து கேலியும் செய்தார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளை ஒன்றும் செய்யமாட்டோம் அவர்களை விட்டுவிடுகிறோம் என்று சொன்னார்கள். என்னுடைய தந்தையை விடவில்லை. என் தந்தையிடம் இஸ்லாமிய வாசகங்களை ஓதுமாறு கட்டாயப்படுத்தினர்.

ஆனால், என்னுடைய தந்தை நான் சொல்ல மாட்டேன் என்பது போல அதற்கு மறுத்ததால், அவரது தலை, காது மற்றும் முதுகில் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டனர். என்னுடைய தந்தை சரிந்து கீழே விழுந்ததை நான் பார்த்தது இன்னும் என்னால் மறக்கவே முடியவில்லை. என் அருகில் இருந்த உறவினர் ஒருவரையும் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்” எனவும் அந்த பெண் அங்கு நடந்த அதிர்ச்சியான சம்பவத்தை பற்றி பேசினார்.

Exit mobile version