அடித்து ஆடும் டாஸ்மாக்… புது ரக பீர் அறிமுகம்…..எதற்காக புது பீர் அமைச்சர் முத்துசாமியின் அடடே விளக்கம் ..

அரசு மதுக் கடைகளில் பார்லியில் தயாரிக்கப்பட்ட புதிய வகை பீர் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக, டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. இதுகுறித்து தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் கேள்வி எழுப்பியபோது பொதுமக்கள் விரும்புவதால், ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளில் புது ரகங்கள் அறிமுகம் செய்கிறோம்,” என விளக்கம் அளித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கோவையில் நடைபெற்ற அரசுவிழாக்களில் கலந்து கொள்வதற்கு வருகை தந்த தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது செய்தியாளர் ஒருவர் கேள்வி ஒன்றை முன்வைத்தார்

‘மதுவிலக்கு கொள்கை சொல்கிறீர்கள்; அப்புறம் எதற்காக, புது ரக மதுபானம் அறிமுகப்படுத்துகிறீர்கள். தற்போது, 100 சதவீத ‘மால்ட்’ பீர் அறிமுகப்படுத்தி உள்ளீர்களே, ஏன்’ என, நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு, அமைச்சர் பதிலளிக்கையில், ”ஒரே ரக மதுபானங்கள் கொடுக்கும்போது, ஏன் ஒரே ரகத்தை மட்டும் கொடுக்கிறீர்கள்; ஏன் மற்ற ரகம் தருவதில்லை. இதில், உள்நோக்கம் இருக்கிறதா என கேட்கின்றனர். என்னென்ன ரகம் வருகிறதோ, பொதுமக்கள் விரும்பும்போது கொடுக்கிறோம். அதேநேரம், மதுப்பழக்கத்தில் இருந்து விடுவிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்,” என்றார்.

மதுபானங்களுக்கு பில் கொடுக்கும் இயந்திரங்கள் கொஞ்சம் கடைகளுக்கு கொடுத்திருக்கிறோம்; அனைத்து கடைகளுக்கும் வழங்கியதும், சென்னையில் இருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்து வருகிறோம்; இதற்கு சில மாதங்களாகும்.

மதுக்கூடம் (பார்) டெண்டர், அரசு விரும்பி கோருவதில்லை. மதுபானம் வாங்குவோர், அமர்ந்து சாப்பிடுவதற்கு இடமில்லாமல் ரோட்டில் நிற்கின்றனர்; வயலுக்கு போகின்றனர். இதுபோன்ற தவறு நடக்காமல் இருக்க மதுக்கூடம் என்கிற நடைமுறை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதை அரசு விரும்பி செய்யவில்லை.

பள்ளிகள், கோவில்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள், பாதிப்பு இல்லாத பகுதிகளுக்கு மாற்றப்படுகின்றன. மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவது ஒன்றிரண்டு இடங்களில் நடக்கிறது. சட்ட விரோதமாக மதுக்கூடங்கள் செயல்பட்டாலோ, மதுபானங்கள் விற்றாலோ ‘சீல்’ வைக்கப்படும். என கூறினார்.

Exit mobile version