பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவு உற்பத்தி குறைவு, மின்தடை, பொருளாதார நெருக்கடி எனப் பல வழிகளில் பாகிஸ்தான் பாதிக்கப்படக்கூடும் ஜம்மு காஷ்மீரில் 26 அப்பாவி பொதுமக்களை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத கும்பல் படுகொலை செய்ததற்கு பதில் நடவடிக்கையாக சிந்து நதிநீர் திறப்பை நிறுத்திவிட்டது மத்திய அரசு.
இதனால் சிந்து நதிநீர் பகிர்வுக்காக 1947-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதேநேரத்தில் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிட்டதால் சிந்து நதிக்கான நீரை திறப்பதை இந்தியா திடீரென நிறுத்தியது. பாகிஸ்தானின் 17 லட்சம் ஏக்கர் நிலம் இதனால் பாலைவனமாகும் அபாயம் ஏற்பட்டது. அமைதிப் பேச்சுகளின் பின்னர் மீண்டும் சிந்து நதிநீரை திறந்துவிட்டது இந்தியா.
இதன் பின்னர் 1960-ம் ஆண்டு சிந்து நதிநீர் தொடர்பான மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் ரவி, பியாஸ், சட்லஜ் நதிகள் இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்டன. ஜீலம் செனாப் நதிகளின் 80% நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது. இதன் பின்னரும் சிந்து நதிநீர் பங்கீடு சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியா உருவாக்கிய நீர்மின் திட்டங்களுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த பின்னணியில்தான் தற்போது, சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறப்பதை நமது நாடு இன்று முதல் நிறுத்திவிட்டது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்த நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது, இதனடிப்படையில் இன்று முதல் சிந்து நதிநீர் திறப்பையும் இந்தியா நிறுத்திவிட்டது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய அரசு பல கடுமையான முடிவுகளை எடுத்துள்ளது. புதன்கிழமை நடந்த பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்தில், 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்தியா கட்டியுள்ள அல்லது கட்டிவரும் அணைகளால் பாகிஸ்தானுக்கு ஆப்பு ரெடியாகிறது..
இந்த ஒப்பந்தத்தின் கீழ், சிந்து, செனாப், ஜீலம், பியாஸ், ரவி மற்றும் சட்லஜ் நதிகளிலிருந்து பாகிஸ்தான் தண்ணீர் பெற்று வந்தது. இந்த நதிகள் அனைத்தும் இந்தியா வழியாகப் பாகிஸ்தானுக்குச் சென்று, குடிநீர், நீர்ப்பாசனம், மின் உற்பத்தி போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டதால் பாகிஸ்தான் கலக்கமடைந்துள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டதன் காரணமாக, நீண்ட காலமாகப் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் அண்டை நாடான பாகிஸ்தான், ஒவ்வொரு துளி நீருக்கும் Depend ஆகக்கூடும். மேலும், தண்ணீர் இல்லாமல் பாகிஸ்தானில் உணவு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்படலாம், இது லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு நெருக்கடியை உருவாக்கும். வீடுகளுக்குச் செல்லும் குடிநீர் மற்றும் வயல்களின் நீர்ப்பாசனத்திற்காக பாகிஸ்தான் சிந்து நதி நீரைச் சார்ந்துள்ளது. இது அந்நாட்டின் பல நீர்மின் திட்டங்களுக்கும் முக்கியமானது. இத்தகைய சூழ்நிலையில், நீர் நிறுத்தத்தால் பாகிஸ்தானின் பல நகரங்கள் இருளில் மூழ்கக்கூடும். மின்சாரம் இல்லாமல் வணிகம் முடங்குவதன் விளைவு நேரடியாக அந்நாட்டின் பொருளாதாரம் மீது தெரியும்.
பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைக்கும் 5 அம்சங்கள்
விவசாயம்: பாகிஸ்தானின் நீர்ப்பாசன நிலங்களில் சுமார் 80% சிந்து நதி நீரைச் சார்ந்துள்ளது. நீர் தடுப்பால் கோதுமை, அரிசி மற்றும் பருத்தி போன்ற முக்கியப் பயிர்களின் மகசூல் குறையக்கூடும். இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் (GDP) உணவுப் பாதுகாப்புக்கும் முக்கியமானது. கூடுதலாக, நீர்ப்பாசனம் குறைவதால் உப்புத்தன்மை பிரச்சனை மோசமடையக்கூடும். இது ஏற்கனவே 43% விவசாய நிலங்களைப் பாதிக்கிறது.
மின்சாரம்: தர்பேலா மற்றும் மங்களா அணைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் நீர்மின்சாரம் (இது மின்சாரத் தேவையில் சுமார் 30% பூர்த்தி செய்கிறது) நீர் ஓட்டம் குறைவதால் பாதிக்கப்படக்கூடும். சிந்து நதி அந்நாட்டின் பல நீர்மின் திட்டங்களுக்கு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்பு: நீர் நிறுத்தத்தால் பயிர் மகசூல் குறைந்து, பாகிஸ்தானின் கிராமப்புற வேலைவாய்ப்பு கடுமையாகப் பாதிக்கப்படும். இது நகர்ப்புறங்களுக்கு மக்கள் குடிபெயர்வதை அதிகரித்து, லாகூர் மற்றும் கராச்சி போன்ற முக்கிய நகரங்களில் அழுத்தத்தை உருவாக்கும்.
மாகாணங்களுக்கிடையே மோதல்கள்: மாகாணங்களுக்கிடையே நீர் பங்கீடு தொடர்பாக மோதல் ஏற்படக்கூடும். நீர் ஓட்டம் குறைவது மாகாணங்களுக்கிடையே மோதல்களுக்கு வழிவகுக்கும். இது 1991 நீர் ஒப்பந்தத்தின் கீழ் இருந்த பழைய பதற்றத்தை மீண்டும் காட்டக்கூடும். அப்போது பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்க்வா மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்கள் நீர் ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் இந்த ஒப்பந்தம் பெரும் சர்ச்சையை ஏற்பட்டது.
ஏற்றுமதி பாதிப்பு: இந்தியாவின் நீர் நிறுத்தம் பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் பாகிஸ்தானிய ரூபாயை கூட பாதிக்கக்கூடும். உண்மையில், நீர் ஓட்டம் குறைந்தால் பாஸ்மதி அரிசி உட்படப் பல விவசாய ஏற்றுமதிகள் குறையலாம். இது அந்நிய செலாவணி கையிருப்பைப் பாதித்து, பாகிஸ்தானிய ரூபாயை பலவீனப்படுத்தும்.