உச்சநீதிமன்றம் கெடு விதித்த நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யச் செந்தில் பாலாஜி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணையின் போது, செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கி பெரும் தவறு செய்துவிட்டோம் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர் பதவியா? பிணையா? என்பதை முடிவு செய்து திங்கட்கிழமை தெரிவிக்க வேண்டும் எனக் கெடு விதித்தனர்.இந்த நிலையில், சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். இதனால் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது உறுதியா என்கிற கேள்வி எழுந்துள்ளது.தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் மசோதா தாக்கல் செய்வார் என செந்தில் பாலாஜி பெயர் குறிப்பிட்டிருந்த நிலையில், அமைச்சர் ரகுபதி மசோவை இன்று அறிமுகம் செய்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய இருப்பதாலேயே இந்த திடீர் மாற்றம் எனக் கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி கைது
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 471 நாட்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
சுப்ரீம் கோர்ட் கெடு
அதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை மற்றும் வித்யா குமார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த அபய் எஸ் ஓகா மற்றும் ஏஜி மாசி தலைமையிலான அமர்வு விசாரணையின் போது திங்கட்கிழமைக்குள் ஜாமீனா? அமைச்சர் பதவியா? என்பதை செந்தில் பாலாஜி தெரிவிக்க கெடு விதித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
அமைச்சர் பதவிக்கு சிக்கல்
இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியதை அடுத்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறை தண்டனை விதிக்க வழிவகுக்கும் மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்வார் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அதை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவடைந்ததும், சட்டம் முன்பதிவு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ள சாராயக்காரர்கள், கணினி வெளி சட்ட குற்றவாளிகள், பாலியல் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட உள்ள திருத்தச் சட்டம் முன் வடிவை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய இருப்பதாக இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
செந்தில் பாலாஜி ராஜினாமா உறுதி?
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், இந்த மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். அதாவது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டால் இன்று தாக்கல் செய்யப்படும் மசோதா சட்டப்பேரவையின் இறுதி நாளான ஏப்ரல் 29 ஆம் தேதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டம் ஆகும். அன்றைய தினம் செந்தில் பாலாஜியால் பதிலளிக்க முடியாது என்பதால்தான், மாற்று ஏற்பாடாக இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மசோதாவை தாக்கல் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.