தமிழகத்தில் ஜவுளி புரட்சி ! மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 1000 ஏக்கரில் ஜவுளி பூங்கா! 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு !

தமிழகத்தில் ஜவுளி புரட்சி! மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 1000 ஏக்கரில் ஜவுளி பூங்கா! 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழகத்தில் ஜவுளி புரட்சி! விருதுநகரில் 1000 ஏக்கரில் அமைகிறது மத்திய அரசின் பிரதம மந்திரி ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா இதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

தொழில்துறையினர் தங்கள் ஜவுளி தொழிற்சாலைகளை ஒருங்கிணைந்து அமைப்பதற்கு அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக ஜவுளி பூங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. சர்வதேச தரத்திலான புதிய பூங்காக்களை வளர்ச்சி மையங்களாக உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தியா முழுவதும்

தமிழகம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இத்திட்டத்தின் கீழ் 54 ஜவுளிப் பூங்காக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இதுவரை ரூ.14,243.69 கோடி முதலீட்டை ஈர்த்து , 1,05,709 பேருக்கு நேரடி மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் 51 சதவீத நிதி பங்களிப்பு, மாநில அரசின் 49 சதவீத நிதி பங்களிப்பில் 1052 ஏக்கரில் சிப்காட் நிலத்தில் ஒருங்கிணைந்த பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது.

ஜவுளி பூங்கா விருதுநகரில் அமையும்பட்சத்தில் அப்பகுதியை சுற்றி இருக்கும் கிராமத்தினருக்கு சிறந்த மாற்று தொழிலாக இருப்பதுடன், அப்பகுதி பொருளாதார ரீதியாக வளர்ச்சியும் பெறும். தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பி.எம்., மித்ரா ஜவுளி பூங்கா இ.குமாரலிங்கபுரத்தில் சிப்காட் நிலத்தில் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதை மார்ச் 22ல் முதல்வர் ஸ்டாலின், மத்திய வர்த்தகம், ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையழுத்திடப்பட்டன. காணொளி காட்சி மூலம் பூஜையும் போடப்பட்டது.

1052 ஏக்கர் சிப்காட் நிலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ரூ.2 ஆயிரம் கோடி திட்ட மதிப்பில் செயல்படுத்துகிறது. இதில் 51 சதவீதம் மத்திய அரசும், 49 சதவீதம் மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது. இ.குமாரலிங்கபுரத்தை மையமாக கொண்டு அருகில் உள்ள அச்சம்பட்டி, கோவில்புலிக்குத்தி கிராமங்கள் வரை இந்த ஜவுளி பூங்கா பெரிய அளவில் அமைகிறது.

இதன் மூலம் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர். அதிவீன உட்கட்டமைப்பு, ஒருங்கிணைந்த மதிப்பு சங்கிலி, சிறப்பு உற்பத்தி பகுதிகள், சமூக உட்கட்டமைப்பு, உற்பத்தியை உடன் தொடங்க சிறப்பு வசதிகள், வணிகப்பகுதி, பொது அடிப்படை வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.

ஒரு துணியின் துவக்கம் முதல் இறுதி வரை என்னென்ன தொழில் செய்யப்படுகின்றனவோ அதற்கான ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. தையல், டிசைனிங், டை உள்ளிட்ட ஜவுளி தொடர்பான அனைத்து தொழில்களும் இந்த பூங்காவில் இடம்பெற உள்ளன.

இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்பு வசதிகளும் செயப்பட உள்ளன. ஒரு ஏக்கரில் சிப்காட் அலுவலகம் அமைய உள்ளது. நான்கு வழிச்சாலையில் இருந்து குமாரலிங்கபுரத்திற்கு செல்லும் ரோடு 30 மீட்டருக்கு மாநில நெடுஞ்சாலைத்துறையால் அகலப்படுத்தப்பட உள்ளது. 1.8 கி.மீ., வரை விரிவாக்கம் செய்யப்படும். மண் பரிசோதனை முடிந்த விட்ட நிலையில் விரைவில் கட்டுமான பணிகள் துவங்க உள்ளன. பல கட்டங்களாக பணிகள் நடக்க உள்ளன.

ரூ.36 கோடிக்கு குடிநீர் பிளான்ட் அமைக்கப்பட்டு குடிநீர் வசதி செய்யப்பட உள்ளது. இந்த ஜவுளி பூங்கா முழுவீச்சில் செயல்பாட்டுக்கு வந்தவுடன் குமாரலிங்கபுரம், கோவில்புலிக்குத்தி கிராமங்களில் உள்ள துவக்கப்பள்ளிகளை தத்தெடுத்து அப்பள்ளிக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட உள்ளன. பல கட்டங்களாக வளர்ச்சி பணிகள் செய்யப்பட உள்ளன.

முதல் கட்டத்தில் அமைய உள்ள ஆலைகள் மூலம் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் வரை பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். அடுத்தடுத்த கட்டங்களில் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகமாகி 2 லட்சம் வேலைவாய்ப்புகள் வரை உருவாகும். இது விருதுநகர் மாவட்ட மத்திய பகுதி மக்களுக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.

குமாரலிங்கபுரம், எட்டூர்வட்டம், நடுவப்பட்டி, முத்துலிங்காபுரம், வாடியூர் பகுதி மக்கள் பட்டாசு தொழிலில் தான் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்களில் தங்கள் குடும்பத்தை இழந்தவர்கள் பலர் உள்ளனர்.
இவர்களுக்கு இந்த ஜவுளி பூங்கா அருமருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு மனது வைத்ததால் தமிழகத்திற்கும், விருதுநகர் மாவட்டத்திற்கும் வந்துள்ள இந்த திட்டம் தென் தமிழகத்தில் ஜவுளி தொடர்பான வேலைவாய்ப்புக்கு சிறந்த தளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஜவுளி தொழில்கள் அனைத்திற்கும் இடமளிக்கும் வகையில் அலகு வாரியாக கட்டடங்கள் அமைக்கப்பட உள்ளன. குறிப்பாக சாய கழிவுகளை சுத்திகரிக்க சி.யு.டி., சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மண் பரிசோதனை முடிந்து விரைவில் பணிகள் துவங்கும். 160 முதல் 180 டெக்ஸ்டைல், அப்பேரல் அலகுகள் ஜவுளி பூங்கா மூலம் இடம்பெற உள்ளன. தமிழகத்தின் மிகப்பெரிய ஜவுளி பூங்காவாக இது இருக்கும். ஒவ்வொரு கட்டமாக இதன் வளர்ச்சி இருக்கும். தற்போது 11 ஜவுளி நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளன.

Exit mobile version