தமிழ்நாட்டில் ஒரு விசித்திர காட்சி நிலவுகின்றது

ஒரு பக்கம் சிவாலய ஓட்டம் என ஓடுகின்றார்கள், மகாபாரத முடிவில் பீமன் பாவ நிவர்த்தி யாகத்தின் ஏற்பாடுகளுக்காக சென்றபொழுது ஒரு பயங்கர மிருகத்துக்கு அஞ்சி அவன் ஓடியபடியே 12 ருத்திராட்சங்களை வீசியபடியே ஓடினானாம், அதில் 12 சிவாலயங்கள் அதில் உருவானதாம்

இதை நினைவுபடுத்தி மகா சிவராத்திரிக்காக சிவாலய ஓட்டம் ஒரு பக்கம் ஆத்தீக பக்தர்களால் நடத்தபடுகின்றது

அப்பக்கம் கறுப்பு சட்டை ஆத்திக திமுக சட்டசபை ஓட்டம் என ஒன்றை நடத்துகின்றது

பீமன் “கோவிந்தா” என சொல்லி ஓடியது போல ஸ்டாலின் கோஷ்டி “ஏ பழனிச்சாமி.” என சொல்லியபடி சட்டசபைக்குள் செல்கின்றது, பழனிச்சாமியின் அதிரடி கேள்விகளுக்கு பதில் தெரியாமல் பீமன் தலைதெறிக்க ஓடியது போல ஓடிவந்துவிடுகின்றது

இப்படியாக அனுதினமும் திமுகவின் சட்டசபை ஓட்டம் பிரமாதமாக நடக்கின்றது, பீமனுக்காவது கண்ணன் இருந்தான், கறுப்பு சட்டைக்கு பிரசாந்த் கிஷோர் தவிர யாருமில்லை அந்த மனிதரும் கண்ணன் அல்ல சகுனி.

அர்ஜூனக்கு கண்ணன் போல என கிஷோரை நினைக்கின்றது திமுக, ஆனால் அவர் துரியனுக்கு சகுனி என்பது புரியவில்லை

இரு கோஷ்டிகளின் ஓட்டங்களும் அட்டகாசமாக நடக்கின்றன‌

இதில் சிவாலய கோஷ்டி ஒட்டம் இன்று முடிந்துவிடும் ஆனால் திமுக கோஷ்டியின் ஓட்டம் இப்போதைக்கு முடியாது, கடல் அலை ஆக்ரோஷமாக கரைக்கு வந்து பவ்யமாக திரும்புவது போல இவர்களும் ஆக்ரோஷமாக ஓடி சென்று பவ்வியமாக திரும்பி வந்து கொண்டே இருப்பார்கள்.

கட்டுரை :- எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்.

Exit mobile version