காலை மாலை விளக்கேற்ற கடவுள் கூறினாரா? ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்?

காலையும், மாலையும் ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? விளக்கு ஏற்றினால் தான் வாழ்க்கை வளமாக இருக்குமா? கடவுள் வந்து விளக்கேற்ற சொன்னாரா? இப்படி பல பேர் விதண்டாவாதம் செய்து கொண்டிருப்பார்கள். இன்று நம்மில் எத்தனை பேர் வழக்கமாக விளக்கு ஏற்றும் பழக்கத்தை கொண்டிருக்கிறோம்? நமது முன்னோர்கள் நாள் தவறாமல் காலையும், மாலையும் விளக்கு ஏற்றி வந்தனர் என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்கு என்ன காரணம்? கட்டாயம் விளக்கேற்ற அறிவுறுத்துவதன் தத்துவம் என்ன? ஒரு சிலர் காலையில் மட்டும் விளக்கு ஏற்றுவார்கள். ஒரு சிலர் மாலையில் மட்டும் விளக்கு ஏற்றுவார்கள். இன்னும் பலர் வெள்ளிக்கிழமை மட்டும் விளக்கு ஏற்றி வைப்பார்கள். இவ்வாறு விளக்கு ஏற்றுவதற்கு அவர் அவர்களுக்கு வசதியாக இருக்கும் நேரத்தையும், சாஸ்திரத்தையும் கடைபிடிப்பார்கள். உண்மையில் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்ற வேண்டுமா? ஏன்? என்று இந்த பதிவில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

காலையில் தீபம் ஏற்றுவது என்பது நமது முன்னோர்கள் தவறாமல் செய்து வந்த ஒரு விஷயம் தான். அன்றைய காலகட்டத்தில் விவசாயத்திற்கும், மற்ற பல வேலைகளுக்கும் செல்லும் குடும்பத் தலைவர்கள் தான் இருந்தார்கள். செல்லும் காரியம் தடைகள் இன்றி நல்லபடியாக முடிக்க வீட்டில் காலையில் தீபம் ஏற்றி சூரிய பகவானை வணங்கும் பழக்கம் இருந்து வந்தது. சூரிய நமஸ்காரத்தை இரு உள்ளங்கைகளை சேர்த்து வான் நோக்கி காண்பித்து பின்னர் கைகூப்பி வணங்குவார்கள். உள்ளங்கையில் பிரபஞ்சத்தின் நல்லவற்றை கிரகிக்கும் ஆற்றல் உண்டு. இதனால் அவர்களின் உடலும், மனமும் தெளிவாக இருந்தது. சூரிய வணக்கம் இன்று உடல் ஆரோக்கியம் தரும் என்று புரிந்து கொண்டு இருக்கிறோம். அன்று எந்த டாக்டரும் இதை சொல்லி நம் முன்னோர்கள் செய்யவில்லை.

சூரியன் உதயமாகும் முன்னர் ஆரஞ்சு வண்ணத்தில் மேல் எழும் சூரியக் கதிர்கள் அருணோதயம் என்று கூறுவார்கள். இந்த அருணோதய நேரத்தில் விளக்கு ஏற்றி வைத்தால் கடவுளின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும். உடலும், மனமும் ஆரோக்கியம் பெறும். அன்றைய நாள் முழுவதும் எதையோ சாதித்த திருப்தி உண்டாகும். இதை உணர்ந்து பார்த்தால் தெரியும். இந்த வேளையில் தீபம் ஏற்றினால் வீட்டில் மூதேவி நுழைவதை தவிர்க்க முடியும் என்று அவர்கள் நம்பினார்கள்.

தரித்திரம் ஏற்படாமல், நேர்மறை சக்திகள் வீட்டை சுற்றி இருக்கும். இதற்கு அறிவியல் காரணமும் உண்டு. அருணோதயத்தில் தான் பூக்கள், தன் இனிய இதழ்களை விரித்து அழகாய் மலரும். பூக்கள் மலர்வதை அந்த நேரத்தில் நீங்கள் காண முடியும். செடி, கொடி, மரம் என்று தாவரங்கள் அனைத்திற்கும் இந்த நேரத்தில் தான் உயிர் தன்மை அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் துவங்கும் செயல்கள் நன்மைகளை பெற்றுத் தரும்.

அதே போல் சூரியன் மறையும் நேரத்திற்கு முன்னர் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். மறையும் சூரியக் கதிர்கள் மூலமும் சில தாவரங்கள் உயிர்பெறும். ஓர் இடத்தில் அறிவியல் இருந்தால் அங்கு ஆன்மீகமும் கட்டாயம் இருக்கும். மூதேவியை விரட்டி ஆயிற்று. அடுத்து ஸ்ரீ தேவியை வீட்டிற்குள் அழைக்க வேண்டுமே!! லக்ஷ்மி தேவி வீட்டில் இருந்தால் தான் நன்மைகளும், செல்வ வளமும் இல்லத்தில் நிறைந்து இருக்கும். தினமும் தவறாமல் மாலை சூரியன் மறையும் நேரத்திற்கு முன்னர் தீபம் ஏற்றிவிட வேண்டும். இதனால் அஷ்ட லக்ஷ்மிகளும் வீட்டிற்குள் வருவார்கள். நமது இல்லத்தில் எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் இருக்கும். எண்ணங்கள் தான் வாழ்க்கை. நம்பிக்கையுடன் கூடிய பிரார்த்தனைகள் எந்த நேரத்தில் செய்தாலும் பலிக்கும். ஆனாலும் சூரிய பகவானின் உதயமும், அஸ்தமனமும் நம் பிரார்த்தனைகளை பரிபூரணமாக ஏற்கும் ஆற்றல் கொண்டது.

எவ்வளவு பணிகள் நமக்கு இருந்தாலும் பரவாயில்லை. அதற்கு இடையில் ஒரு நிமிடம் நம்மால் நேரம் ஒதுக்க முடியாதா? தீபம் ஏற்றுவதற்கு முக்கிய காரணம் குடும்பம் அமைதியாக, சுபீட்சமாக இருக்கத் தானே? இன்று பலருக்கும் நிம்மதி இல்லாமல் போனதற்கு காரணம் மன அழுத்தம். தினமும் 2 நிமிடம் காலையும், மாலையும் தீபம் ஏற்றுவதால் மனம் இறுக்கத்திலிருந்து விடுபட்டு தெளிவு பெறும். தொட்டதெல்லாம் துலங்கும். 1 நிமிடம் கண்களை மூடி வேண்டிக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் வேண்டும் வேண்டுதல் அப்படியே பலிக்கும். சகல செல்வங்களும் அமைந்து மோட்சம் கிட்டும்.

Exit mobile version